This translation may not reflect the changes made since 2010-06-29 in the English original.

Please see the Translations README for information on maintaining translations of this article.

மென்பொருள் ஏன் கட்டற்று இருக்க வேண்டும்

ஆசிரியர்: ரிச்சர்ட் எம். ஸ்டால்மேன்

அறிமுகம்

மென்பொருள் என்றொன்று இருப்பது அதன் பயன்பாடு குறித்த முடிவுகள் எவ்வாறு மேற்கொள்ளப் பட வேண்டும் என்பது குறித்த தவிர்க்க இயலாத கேள்வியினை எழுப்புகிறது. உதாரணத்திற்கு நிரலொன்றின் நகலினையுடைய நபரொருவர் அதன் நகலொன்றைப் பெற விழையும் மற்றொருவரை சந்திக்கிறார் என வைத்துக் கொள்வோம். அவர்களால் அந்நிரலை நகல் எடுக்க இயலும். இங்ஙனம் நடைப் பெறுவதை யார் தீர்மானிப்பது? சம்பந்தப் பட்ட நபர்களா? அல்லது“உடைமையாளரென்று” அழைக்கப்படும் இன்னொருவரா?

உருவாக்குவோரது இலாபத்தினை இதன் விடைக்கான காரணியாக அனுமானித்துக் கொண்டு, இவ்வினாக்களை மென்பொருட்களை உருவாக்குவோர் கருதுகிறார்கள். வர்த்தகத்துக்குள்ள அரசியல் பலமானது இவ்விரு காரணிகளையும், அதற்கான விடையாக உருவாக்குவோர் சொல்வதையும் ஏற்கும்படி அரசாங்கத்தை இட்டுச் சென்றுள்ளது. அதாவது நிரலொன்றுக்கு உடைமையாளர் இருக்கிறாரென்று. நிதர்சனத்தில் அது நிரலின் உருவாக்கத்தில் தொடர்புடைய நிறுவனமே.

இதே கேள்வியினை வேறொரு காரணியைக் கொண்டு நான் கருத விரும்புகிறேன்: சமுதாயத்தின் பொதுவான செழிப்பும் விடுதலையும்.

தற்போதைய சட்டங்களுக்கு உட்பட்டு இதன் விடையைத் தீர்மானிக்க இயலாது. அறத்தைச் சார்ந்து சட்டமிருக்க வேண்டுமே ஒழிய சட்டத்தை சார்ந்து அறம் இருத்தலாகாது. இவ்வினாவினை தற்போதைய நடைமுறையாலும் தீர்மானிக்க இயலாது. வேண்டுமாயின் சாத்தியமான தீர்வுகளை அது பரிந்துரைக்கலாம். மென்பொருட்களுக்கு உடைமையாளர்களை அங்கீகரிப்பதால் யாரெல்லாம் பயனடைகிறார்கள்? யாரெல்லாம் நட்டப்படுகிறார்கள்? ஏன்? எவ்வளவு? என்பவையே இதனைத் தீர்மானிக்க ஒரே வழி. வேறுவிதமாகச் சொல்ல வேண்டுமாயின், தனியொருவரின் விடுதலையையும் பொருட்களின் உற்பத்தியையும் கருத்தில் நிறுத்தி, இலாப-நட்ட ஆராய்ச்சியொன்றை சமுதாயத்தின் பொருட்டு நாம் மேற்கொள்ள வேண்டும்.

இக்கட்டுரையில் உடைமையாளர்களைக் கொண்டிருப்பதால் ஏற்படும் விளைவுகளை விவரித்து முடிவுகள் பாதகமாக அமையும் என்பதை எடுத்துக்காட்டுகிறேன். நாம் இயற்றும் மென்பொருட்களைப் பகிர, மறுவிநியோகம் செய்ய, கற்க, மேம்படுத்த பிறரை ஊக்குவிக்க நிரலாளர்கள் கடமைப்பட்டிருக்கின்றனர் என்பதே எமது முடிவு. வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால்“கட்டற்ற” மென்பொருட்களை இயற்றுவது.(1)

தங்கள் ஆளுமையை உடைமையாளர்கள் எவ்வாறு நியாயப் படுத்துகிறார்கள்

நிரல்கள் சொத்தாகக் கருதப்படும் இன்றைய முறையினால் பயனடைவோர் நிரல்களைத் தங்களுடையதாகக் கோரிடும் பொருட்டு இரண்டு வாதங்களை முன்வைக்கிறார்கள். உணர்வுப் பூர்வமான வாதமொன்று; பொருளாதாரம் சார்ந்த வாதம் மற்றொன்று.

“என்னுடைய வியர்வை, மனம், ஆவியனைத்தையும் இந்நிரலுக்காக தந்துள்ளேன். இது என்னிடமிருந்து வருகிறது. இது என்னுடையது!” என்பதாக இருக்கிறது உணர்வுபூர்வமான வாதம்.

இவ்வாதத்தினை சிறப்பாக மறுத்துரைக்க வேண்டிய அவசியமில்லை. இத்தகைய பந்த உணர்வானது நிரலாளர்கள் தங்களுக்குப் பொருந்துகிற போது ஏற்படுத்திக் கொள்ளக்கூடியது. தவிர்க்க இயலாதது ஒன்றுமல்ல. அதே வேளையில் இதே நிரலாளர்கள் ஒரு சம்பளத்தின் பொருட்டு எவ்வாறு தங்களின் எல்லா உரிமைகளையும் ஒரு பெரிய நிறுவனத்திடம் அடமானம் வைக்கிறார்கள் என்பதையும் கருத்தில் கொள்ளவும். உணர்வுபூர்வமான அனைத்து பந்தங்களும் சட்டென்று மறைந்துவிடும். மாறாக மத்திய காலங்களில் தன்னுடைய படைப்பொன்றில் பெயரைக் கூட இடாத தலைசிறந்தக் கலைஞர்களையும் கருத்தில் கொள்ளவும். அவர்களுக்கு கலைஞரின் பெயர் முக்கியமல்ல. பணியின் நிறைவும் அதனால் பூர்த்தியாகும் நோக்கமுமே பொருட்படுத்தப்பட்டது. இவ்வணுகுமுறையானது பல நூறாண்டுகளுக்குத் தொடர்ந்தது.

பொருளாதார அணுகுமுறையின் போக்கானது; “ நான் பணம் சம்பாதிக்க விரும்புகின்றேன். (பொதுவாக‘வாழ்க்கையை நடத்த’ என அரைகுறையாக இது விவரிக்கப் படுகிறது.) தாங்கள் நிரலெழுதுவதன் மூலம் என்னைப் பணக்காரனாக அனுமதிக்கவில்லையெனில் நான் நிரலெழுத மாட்டேன். என்னைப் போன்றே பிறரும் இருப்பதால் யாருமே நிரலெழுத மாட்டார்கள். கடைசியில் நிரலெதுவுமே இல்லாத நிலையில் சிக்கிக் கொள்வீர்கள்! ” புத்திசாலிகளிடமிருந்து கிடைக்கும் நட்பான அறிவுரையாக இவ்வச்சுறுத்தல் அரங்கேற்றப்படுகிறது.

இவ்வச்சுறுத்தல் ஏன் பித்தலாட்டமானது என்பதை பின்னர் விளக்குகின்றேன். வாதத்தின் மற்றொரு கூற்றில் தெளிவாகத் தெரியும் உள்ளார்ந்த அனுமானத்தைப் பற்றி முதலில் பகர விரும்புகிறேன்.

நிரலொன்றும் இல்லாத நிலையினையும் தனியுரிம நிரலொன்றின் சமூகப் பயன்பாட்டையும் ஒப்பிட்டவாறே இதனாக்கம் துவங்குகிறது. தொடர்ந்து ஒட்டுமொத்தமாய் பார்க்கிறபோது பயனளிப்பதாய் இருப்பதால் தனியுரிம மென்பொருளின் உருவாக்கம் ஊக்குவிக்கப்பட வேண்டியதாக முடிவு கொள்கிறது. இரண்டு சாத்தியக் கூறுகளை மட்டும் ஒப்பிடுவதே இதிலுள்ள மாயையாகும். தனியுரிம மென்பொருளிருக்கும் நிலையொன்று; மென்பொருளே இல்லாத நிலை மற்றொன்று; வேறு மாற்றுக்களே இல்லாததாக அனுமானிக்கப் படுகிறது.

மென்பொருளுக்கு பதிப்புரிமையளிக்கும் முறையால், மென்பொருள் உருவாக்கம் என்பதே அம்மென்பொருளின் பயன்பாட்டினை நிர்வகிக்கக் கூடிய ஒரு உடைமையாளரின் இருப்போடு தொடர்பு படுத்தப்படுகின்றது. இத்தொடர்பு இருக்கின்ற வரையில், நாம் தனியுரிம மென்பொருள் அல்லது மென்பொருளில்லா நிலை ஆகிய இரண்டுள் ஒன்று எனும் நிலையையே பெரும்பாலும் சந்திக்கின்றோம். இத்தொடர்பொன்றும் தவிர்க்கவியலாதது அல்ல. உடைமையாளர்களை ஏற்கும் குறிப்பிட்ட சமூக/ சட்டக் கொள்கை முடிவினையே நாம் கேள்விக்குட் படுத்துகின்றோம். வாய்ப்பினை தனியுரிம மென்பொருள் - மென்பொருளற்ற நிலை எனச் செய்வது கேள்வியிடமே இறைஞ்சுவதாகும்.

உடைமையாளர்களைக் கொண்டிருப்பதற்கு எதிரான வாதம்

“மென்பொருள் உருவாக்கத்தை உடைமையாளர்களைக் கொண்டிருப்பதோடு தொடர்பு படுத்தி அதன் பயன்பாட்டினைக் கட்டுப்படுத்த வேண்டுமா?” என்பதே நம்முன்னுள்ள கேள்வி.

இதனை முடிவு செய்வதற்கு, இவ்விரு செயல்களாலும் சமூகத்தில் ஏற்படக்கூடிய தாக்கத்தினை தனித் தனியாக நாம் தேர்ந்தாராய வேண்டும். மென்பொருளை உருவாக்குவதால் (அதனை விநியோகிப்பதற்கான நியதிகளைச் சாராது) ஏற்படும் தாக்கத்தினையும் அதன் பயன்பாட்டினைக் கட்டுப் படுத்துவதால் ஏற்படும் தாக்கத்தினையும் (மென்பொருள் உருவாக்கப் பட்டுவிட்டது என்பதை அனுமானித்துக் கொண்டு) நாம் கருத வேண்டும். இவற்றுள் ஒன்று நன்மை பயப்பதாகவும் மற்றொன்று தீமைப் பயப்பதாகவும் இருக்குமாயின், இவற்றுக்கிடையே ஏற்படுத்தப் படும் தொடர்பினை விட்டுவிட்டு, நன்மைப் பயப்பதை மேற்கொள்வது நல்லது.

வேறு வகையில் சொல்லவேண்டுமாயின், ஏற்கனவே உருவாக்கப் பட்ட நிரலொன்றின் விநியோகத்தினைக் கட்டுப் படுத்துவது ஒட்டுமொத்த சமூகத்திற்கு தீமையாயின், அறநெறி வாழ் மென்பொருள் உருவாக்குபவர் அங்ஙனம் செய்யமாட்டார்.

பகிர்ந்து கொள்வதைக் கட்டுபடுத்துவதால் ஏற்படும் தாக்கத்தை அறிய, நாம் கட்டுப் படுத்தப் பட்ட (தனியுரிம) நிரலொன்றால் சமூகத்திற்கு ஏற்படும் பயனை அதே மென்பொருள் அனைவருக்கும் கிடைப்பதால் ஏற்படும் பயனுடன் ஒப்பிட வேண்டும். அதாவது சாத்தியமுள்ள ஈருலகங்களை ஒப்பிடுவது.

இவ்வாய்வானது இதனை மறுத்துரைப்பதாய் அமையும் வாதமான, “நிரலின் நகலொன்றைப் பிறருடன் பகிர்ந்து கொள்வதால் ஏற்படும் நன்மையை அங்ஙனம் செய்வதால் உடைமையாளருக்கு ஏற்படும் தீமை இல்லாது செய்துவிடுகிறது ” என்பதையும் ஆராய்கிறது. இப் பிரதிவாதமானது நன்மையும் தீமையும் சம அளவில் இருப்பதாகக் கருதுகிறது. இவ்வாய்வானது இப்பரிமாணங்களை ஒப்பிட்டு இதனால் ஏற்படும் நன்மை மிக அதிகம் எனவும் எடுத்துக் காட்டுகிறது.

இவ்வாதத்தை தெளிவாக விளக்க, பிரிதொரு துறையான சாலை நிர்மாணத்துடன் பொருத்திப் பார்ப்போம்.

அனைத்து சாலைகளையும் வசூல் சாவடிகளுடன் நிர்மாணிக்க நிதியளிப்பது சாத்தியப்படலாம். தெரு முனைகள் அனைத்திலும் வசூல் சாவடிகள் அமைக்கப்பெற இது வழிவகுக்கும். இத்தகைய முறையால் சாலைகளை மேம்படுத்த மிகப்பெரிய ஊக்கத் தொகையையும் திரட்டித் தர இயலலாம். அதே சமயம் இது குறிப்பிட்ட ஒரு சாலையைப் பயன்படுத்தும் எந்தவொரு பயனரையும் அச்சாலைக்காக நிதியளிக்க நிர்பந்திக்கவும் செய்யும். ஆனால், வசூல் சாவடியென்பது சுமூகமானதொரு பயணத்திற்கு ஏற்படுத்தப் படும் செயற்கையான தடையாகும். மகிழுந்துகள், சாலைகள் ஆகியவற்றின் இயல்பின் விளைவாக அமையாததால் செயற்கையாகிறது.

வசூல் சாவடிகளைக் கொண்ட சாலைகளையும், தடையற்ற சாலைகளையும் அதன் பயன்பாடுகளைக் கொண்டு ஒப்பிடுகையில், வசூல் சாவடிகள் இல்லாத சாலைகள் நிர்மாணிக்க, இயக்க செலவு குறைந்ததாகவும், பாதுகாப்பானதாகவும், திறம்பட பயன்படுத்த வல்லதாகவும் இருக்கின்றன.(2) ஏழை நாடொன்றில், வசூல் சாவடிகள், சாலைகளை பல குடிமக்களுக்கு இல்லாது செய்துவிடும். ஆகையால் வசூல் சாவடிகள் இல்லாத சாலைகள் குறைந்த செலவில் சமூகத்திற்கு அதிக பயனைத் தரவல்லது. சமூகத்திற்கு உகந்ததும் கூட. ஆகையால் சமூகம் சாலைகளுக்கான நிதியை வசூல் சாவடிகளின் மூலம் திரட்டாமல் வேறு வழிகளில் கொணர வேண்டும். ஒரு முறை நிர்மாணிக்கப் பட்டுவிட்டால் சாலைகளின் பயன்பாடு தடையற்றதாக இருக்க வேண்டும்.

இச்சாவடிகளை முன்மொழிவோர் நிதித் திரட்ட மாத்திரம் இதனை வழியாகச் சொல்கிற போது, கிடைக்கக்கூடிய வாய்ப்புதனைத் திரிக்கின்றனர். வசூல் சாவடிகள் நிதி திரட்ட வல்லது தான். அவை வேறு சிலவற்றையும் கூடவே செய்கின்றன. விளைவு சாலைகளையே தரமிழக்கச் செய்கின்றன. தடையற்ற சாலைகளைப் போல வசூல் சாவடிகளைக் கொண்ட சாலைகள் நன்மைப் பயப்பதாய் இருப்பதில்லை. தொழில்நுட்ப ரீதியாக மேன்மையுடைய சாலைகளை நமக்குத் தருவதென்பதை, தடையற்ற சாலைகளை வசூல் சாவடிகளைக் கொண்ட சாலைகளாக மாற்றுவது என அர்த்தம் கொண்டால், அது முன்னேற்றமாகாது.

தடையற்ற சாலைகளை உருவாக்குதற்கும் நிதி செலவாகும்தான். அதைப் பொது மக்கள் ஏதாவதொரு வழியில் செலுத்தித் தான் ஆக வேண்டும். ஆனால் இது வசூல் சாவடிகளை இன்றியமையாததாக கருதுவதாகாது. இவ்விரு சந்தர்ப்பங்களிலுமே நிதியளிக்க வேண்டியவர்களாக உள்ள நாம் தடையற்ற சாலைகளுக்கு நிதியளிப்பதால் நாம் செலவிடும் பணத்திற்கு அதிக மதிப்பினைப் பெறுகின்றோம்.

சாலையில்லா நிலையைக் காட்டிலும் வசூல் சாவடிகள் நிறைந்த சாலை தாழ்ந்தது என நான் இங்கே சொல்லவில்லை. வசூலிக்கப்படும் தொகை மிக அதிகமாக இருந்து யாருமே பயன்படுத்தாது போனால் அது உண்மையாகலாம். ஆனால் இது வசூலிப்பவருக்கான கொள்கையாக இருக்க வாய்ப்புகள் குறைவு. ஆயினும், வசூல் சாவடிகள் குறிப்பிடத் தக்க சேதாரமும் அசவுகரியமும் ஏற்படுத்தும் வரையில், அதிக தடைகளையேற்படுத்தாத முறைகளில் நிதி திரட்டுவது நல்லது.

இவ்வாதத்தினை மென்பொருள் உருவாக்கத்திற்கு பொருத்தி, பயனுள்ள மென்பொருளுக்கு,“ வசூல் சாவடிகளை ” ஏற்படுத்துவதென்பது சமூகத்திற்கு பெருந் தீமையை ஏற்படுத்தும் என்பதனை இப்போது எடுத்துகாட்டுகின்றேன். இது நிரல்கள் உருவாக்கத்தை அதிக விலையுள்ளதாக்கி, அதிக விலையுடனே விநியோகம் செய்யத் தக்கதாக்கி, திருப்தியற்று திறம்பட பயன்படுத்த இயலாது செய்துவிடும். நிரல் உருவாக்கம் ஏனைய பிற வழிகளில் ஊக்குவிக்கப் பட வேண்டும் என இது தொடரும். மேற்கொண்டு மென்பொருள் உருவாக்கத்தினை ஊக்குவிக்கவல்ல ஏனைய வழிகளையும், (உண்மையிலேயே தேவையான அளவிற்கு) நிதியளிக்கும் முறையினையும் விளக்குகின்றேன்.

மென்பொருளைக் கட்டுப் படுத்துவதால் ஏற்படும் தீமைகள்

ஒரு நிரல் உருவாக்கப் பட்டதெனவும் அதற்குண்டான நிதியும் அளிக்கப் பட்டுவிட்டதாகவும் நினைத்துக் கொள்ளுங்கள். அதனை இப்போது தனியுரிமமாக ஆக்கவேண்டுமா அல்லது கட்டற்று பகிர்ந்து கொள்ள வழி செய்து பயன்படுத்த வேண்டிமா என்பதனைச் சமூகம் தேர்வு செய்ய வேண்டும். நிரலொன்றின் இருப்பையும் அதன் புழக்கத்தையும் விரும்பத்தக்கதாகக் கருதவும்.(3)

விநியோகத்தினையும் மாற்றங்களையும் கட்டுப் படுத்துவதால் அதன் பயன்பாட்டினை எளிமையாக்க முடியாது. அவற்றால் இடையூறுகளை வேண்டுமாயின் ஏற்படுத்த முடியும். விளைவு எதிர்மறையாகவே இருக்கும். எவ்வளவு? எத்தன்மையது?

மூன்று விதமான பொருட் தீமைகள் இத்தகைய கட்டுபாட்டால் ஏற்படலாம்.

ஒவ்வொரு பொருட் தீமையும் தத்தம் நிலைகளில் உடனிகழக் கூடிய உளவியல் ரீதியான பாதிப்பொன்றினையும் கொண்டுள்ளது. மக்கள் மேற்கொள்ளும் முடிவுகளைத் தொடர்ந்து அவர்களிடையே ஏற்படக்கூடிய உணர்வுகள், அணுகுமுறைகள் மற்றும் சார்புடைமைகளின் தாக்கங்களை இது குறிக்கின்றது. மக்கள் சிந்திக்கும் முறையில் ஏற்படும் இத்தகைய தாக்கம் சக குடிமக்களுடனான அவர்களுடைய உறவுகளைப் பாதிப்பதோடு பொருளாதார விளைவுகளையும் ஏற்படுத்த வல்லதாகின்றது.

நிரலொன்று தரத்தக்க நன்மதிப்பை இம்மூன்று நிலைகளிலான பொருட் தீமைகள் குன்றச் செய்கின்றன. ஆனால இந் நன்மதிப்பை இல்லாது செய்து விட இயலாது. நிரலின் மதிப்புகள் அனைத்தையும் அவை இல்லாது செய்து விடுமாயின், நிரலெழுதவற்கு தேவைப் பட்ட ஆற்றல்கள் அனைத்திற்கும் நிகரான தீமைகளை நிரலெழுதுவது சமூகத்திற்குத் தருவதாகிறது. வாதத்தின் பொருட்டு விற்பனைக்கு இலாபகரமான நிரலொன்று கட்டாயமாக நிகரான நேரடியான பொருளாதார நன்மைகளைத் தரவேண்டும்.

ஆனால் உடனிகழக் கூடிய உளவியல் ரீதியான தீமைகளைக் கருத்தில் கொள்வோமாயின், தனியுரிம மென்பொருள் விளைவிக்க வல்ல தீமைக்கு எல்லையே இல்லை.

நிரல்களின் பயன்பாட்டினை தடுத்தல்

முதல் அளவிலானத் தீமை நிரலின் சாதாரணப் பயன்பாட்டினைத் தடுக்கிறது. நிரலொன்றின் நகலின் இறுதி நிலையாக்கச் செலவு ஏறத்தாழ சுழியம் தான். (அத்துடன் இப்பணியை தாங்களே மேற்கொள்வதின் மூலம் இத்தொகையை தாங்களே செலுத்திவிட முடியும்.) ஆக கட்டற்ற சந்தையொன்றில் , இதற்கு விலையெதுவும் இல்லை. உரிமக் கட்டணம் என்பது நிரலினைப் பயன்படுத்துவதில் குறிப்பிடத்தக்க ஊக்கக்குறைவாகும். பரவலான பயனுள்ள நிரலொன்று தனியுரிமம் பெற்றிருந்தால் சொற்பமானோரே அதனைப் பயன்படுத்துவர்.

சமூகத்திற்கு நிரலொன்றின் பங்கு அதற்கு உடைமையாளரை நியமிப்பதால் குன்றிப்போகின்றது என எளிமையாக காட்டிவிடலாம். விலைக் கொடுக்க வேண்டுமெனும் கட்டாயத்தை சந்திக்கும், நிரலைப் பயன்படுத்தும் ஆற்றலுடைய எவரும், அதனைத் தர முன்வரலாம் அல்லது தாராதவாறே பயன்படுத்தவும் செய்யலாம். பயனரொருவர் விலைத் தருவதற்கு முன்வந்தால், இரு தரப்பினிடையேயான நிகரானதொரு வளப் பரிமாற்றமாகின்றது. ஆனால் அங்ஙனம் செய்யாது நிரலை பயன்படுத்த ஒருவர் முனையும் ஒவ்வொரு சமயமும், இது யாருக்குமே பலனளிக்காது அவரைப் பாதிக்கின்றது. சுழிமுன் எண்களை சுழியத்துடன் கூட்டினால் கிடைப்பதும் சுழிமுன் எண்கள்தான்.

ஆனால் இது நிரலொன்றினை உருவாக்கத் தேவைப்படும் பணியின் அளவைக் குறைத்திடாது. விளைவு, பிரதி மணி நேர பணியொன்று தரும் பயனர் திருப்தியைக் கொண்டு பார்க்கும்போது, ஒட்டுமொத்த பணிமுறையின் நேர்த்தி குறைகிறது.

நிரலொன்றின் நகலுக்கும் மகிழுந்து, நாற்காலி, சான்ட்விச் போன்றவற்றின் நகல்களுக்குமிடையே உள்ள முக்கியமான வேறுபாட்டினை இது பிரதிபலிக்கின்றது. அறிவியல் புதினங்களுக்கு வெளியே பௌதீகப் பொருட்களை நகலெடுப்பதற்கென இயந்திரங்கள் எதுவும் இல்லை. ஆனால் நிரல்களை நகலெடுப்பது சுலபம். சிறிய உழைப்பினைக் கொண்டு யார் வேண்டுமானாலும் தேவைப்படுமளவிற்கு எவ்வளவு நகல் வேண்டுமானாலும் எடுக்கலாம். திடத் தன்மை காக்கப் படுவதால், இது பௌதீகப் பொருட்களைப் பொறுத்த மட்டில் உண்மையாகாது. ஒவ்வொரு புதிய பிரதியும் மூலப் பொருட்களைக் கொண்டு முதற் பிரதி உருவாக்கப் பட்ட அதே முறையில் உருவாக்காப்பட வேண்டும்.

பௌதீகப் பொருட்களைப் பொருத்த மட்டில் குறைவான பொருட்களே வாங்கப்பட்டன என்றால் குறைவான மூலப் பொருட்களும் அவற்றை ஆக்க குறைவான வேலையும் என அர்த்தம் கொள்ளலாம். எனவே அவற்றைப் பயன்படுத்துவதில் காட்டப்படும் ஊக்கக்குறைவில் அர்த்தமுள்ளது. சாதாரணமாக முதற் தொகையொன்று இருப்பதும், உருவாக்கத் தொகையொன்று இருப்பதும், இவை உற்பத்தியின் நெடுகே நிரவி நிற்பதும் உண்மைதான். உற்பத்தியின் இறுதிநிலையாக்கச் செலவு குறிப்பிடத்தக்கதாக இருக்கும் வரையில், உருவாக்கத் தொகையின் பகுதியொன்றை சேர்ப்பது தரத்தில் வேறுபாட்டினை ஏற்படுத்தாது. சாதாரண பயனர்களின் சுதந்தரத்தில் தடை ஏற்படுத்தும் தேவை அதற்கில்லை.

ஆயினும், சுமத்தாது போனால் இலவசமாகக் கிடைக்கக் கூடிய பொருளொன்றின் மீது விலையை சுமத்துவது தர ரீதியான மாற்றமாகும். மென்பொருள் விநியோகத்திற்கு மையப் படுத்தப்பட்டு சுமத்தப்படும் கட்டணம் வலுவானதொரு ஊக்கக் குறைவாகின்றது.

அத்துடன், தற்போது கடைப் பிடிக்கப் படும் மையப்படுத்தப்பட்ட உருவாக்கம் மென்பொருட்களின் நகல்களைக் கொண்டு சேர்க்கக் கூடிய வழிமுறையாகக் கொள்ளக் கூட திறனற்றதாகும். வன் தட்டுக்கள் நாடாக்கள் போன்றவற்றை அவசியத்திற்கு அதிகமான ஆடம்பர பொதிகளுக்குள் உள்ளடக்கி, பெரிய அளவில் உலகம் முழுவதும் அனுப்பி, விற்பனை நிமித்தம் சேர்த்து வைக்கும் முறையாகும் இது. இதற்குண்டான தொகையும் வாணிபத்திற்காக செலவிடப் படும் தொகையாக அளிக்கப்படுகின்றது. உண்மையில் இது உடைமையாளர்களைக் கொண்டிருப்பதால் ஏற்படும் விரயத்தின் ஒரு பகுதியே ஆகும்.

சமூக ஒத்திசைவை சிதைத்தல்

குறிப்பிட்ட நிரலொன்றினை இயக்குவது பயனுடையதெனத் தாங்களும் தங்கள் சுற்றத்தவரும் கருதுவதாக இருக்கட்டும். சுற்றத்தாரைப் பற்றிய தார்மீக அக்கறையினால், இந்நிலையை முறையாகக் கையாள்வது தங்களிருவரையுமே அதனைப் பயன்படுத்தச் செய்யும் எனத் தாங்கள் உணர வேண்டும். தங்களிருவரில் ஒருவரை அந்நிரலைப் பயன்படுத்தச் செய்து மற்றொருவரைத் தடுப்பது பிரிவினையாகும். தாங்களும் சரி தங்களது சுற்றத்தவரும் சரி இதனை ஏற்கத்த தக்கதாக கொள்ள இயலாது.

வழக்கமான மென்பொருள் உரிமமொன்றினை ஏற்பதென்பது தங்களின் சுற்றத்தவரை ஏய்ப்பதாகும். “இந்நிரல் என் சுற்றத்தவருக்கு கிடைக்காதிருக்க உறுதியளிக்கிறேன். இதனால் இதன் நகலொன்று எனக்கு கிடைக்கும்.” இதனை நியாயப் படுத்தும் பொருட்டு, அங்ஙனம் செய்யும் மக்கள், சுற்றத்தவருக்கு உதவுவதின் முக்கியத்துவத்தை புறந்தள்ளிவிட்டு, உளவியல் ரீதியான அழுத்தங்களுக்கு ஆட்படுத்தப்படுகின்றார்கள். இதனால் பொது இயல்பு பாதிப்புக்குள்ளாகிறது. நிரலொன்றின் பயன்பாட்டினைத் ஊக்கமிழக்கச் செய்யும் பொருட் தீமையுடன் தொடர்புடைய உளவியல் ரீதியானக் கேடாகும் இது.

பல பயனர்கள் சுயநினைவற்று பகிர மறுப்பதெனும் தவறினை அங்கீகரிப்பதால், உரிமங்கள் மற்றும் சட்டங்களைப் புறந்தள்ள முடிவெடுத்து, நிரல்களை எவ்வழியிலாவது பகிர்ந்து கொண்டும் விடுகின்றனர். ஆனால் அங்ஙனம் செய்வதற்காக அடிக்கடி குற்றவுணர்வும் கொள்கின்றனர். நல்லதொரு சுற்றத்தவராக இருக்க வேண்டுமாயின் சட்டத்தினை உடைக்க வேண்டும் என அவர்கள் அறிந்திருக்கிறார்கள், ஆயினும் சட்டங்களே அதிகாரமுடையவையாகக் கருதுவதால், நல்லதொரு சுற்றத்தவராக இருப்பதென்பதை (உண்மையில் அவர்கள் அத்தகையவர்களே) கீழ்படியாத, அவமானந்தரும் செயலாக முடிவுசெய்து விடுகின்றனர். இதுவும் ஒரு வகையான உளவியல் பாதிப்பே. ஆனால் இத்தகைய உரிமங்களுக்கும் சட்டங்களுக்கும் தார்மீக உந்துதல் இல்லை என முடிவு செய்வதன் மூலம் இவற்றிலிருந்து ஒருவர் விடுபடலாம்.

தங்களது பணியினைப் பயன்படுத்த பல பயனர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிந்து நிரலாளர்களும் உளவியல் ரீதியான பாதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள். இது ஒருவித எதிர்மறை (அ) மறுப்பு மனோபாவத்திற்கு வித்திடுகிறது. தொழில் நுட்ப ரீதியாக பிரமாதமாகத் தாம் கண்டெடுத்த பணியினை ஊக்க மிகுதியுடன் ஒரு நிரலாளர் விவரிக்கலாம். “அதனைப் பயன்படுத்த நான் அனுமதிக்கப் படுவேனா?” எனக் கேட்கப் படும் போது, அவரது முகம் தொங்கிப் போய், இயலாது என்பதை விடையாக அவர் ஏற்றுக் கொள்வார். ஊக்கமிழப்பது போல் உணர்வதை தவிர்க்கும் பொருட்டு, அவர் இவ்வுண்மையை பெரும்பாலான நேரங்களில் தவிர்த்தோ அல்லது அதன் முக்கியத்துவத்தை குறைக்க வல்ல எதிர்மறையான ஒரு நிலையினையோ தழுவுவார்.

ரீகனின் காலந்தொட்டு யுனைடட் ஸ்டேட்ஸின் தட்டுப்பாடு தொழில்நுட்ப ஆக்கத் திறனல்ல. மாறாக பொது நலத்தின் பொருட்டு இணைந்து பணிசெய்ய உறுதியில்லாமையே ஆகும். பிந்தையதை விளையாகத் தந்து முந்தையதை ஊக்குவிப்பதில் எந்தவொரு அர்த்தமும் இல்லை.

நிரல்களை ஏற்றாற்போல் ஆக்குவதை தடுத்தல்

ஏற்றாற் போல் நிரல்களை ஆக்கிக் கொள்ள இயலாத நிலை, இதனால் ஏற்படும் இரண்டாவது நிலையிலானப் பொருட் தீமையாகும். முந்தைய தொழில்நுட்பத்தினைக் காட்டிலும் மாற்ற எளியதாய் இருப்பதே மென்பொருளின் மிகப் பெரிய நன்மையாகும். ஆனால் வணிக ரீதியாக கிடைக்க வல்ல பெரும்பாலான மென்பொருட்கள், தாங்கள் அதனை வாங்கியப் பிறகும் கூட மாற்றுதற்கு கிடைப்பதில்லை. ஒரு கருப்புப் பெட்டியாக வாங்கவோ விடுக்கவோ மட்டுமே அது கிடைக்கப்பெறுகிறது. அவ்வளவுதான்.

தாங்கள் இயக்கக் கூடிய நிரலொன்று விளங்கிக் கொள்ள கடினமான எண்களைத் தொடர்ச்சியாகக் கொண்டிருக்கும். எவருமே, ஏன் சிறந்த நிரலாளர் ஒருவரால் கூட, அவ்வெண்களை மாற்றி வேறு விதமாகப் பணியாற்ற வைப்பது சுலபமல்ல.

நிரலாளர்கள் நிரலொன்றின் “மூலத்தினைக்” கொண்டு பணியாற்றுவது வழக்கம். இவை போர்டிரான் (Fortran) அல்லது சி (C) போன்ற நிரலாக்க மொழிகளைக் கொண்டு இயற்றப்படுகின்றன. பயன்படுத்தப்படும் தரவுகளையும் நிரலின் பகுதிகளையும் வழங்க பெயர்களை அது பயன்படுத்தும். குறியீடுகளைக் கொண்டு செயல்களைப் பிரநிதிக்கும். உதாரணத்திற்கு கூட்டலுக்கு ‘+’ குறியும் கழித்தலுக்கு ‘-’ குறியும் உள்ளன. நிரலாளர்கள் நிரல்களைப் படித்து மாற்ற உறுதுணையாக இங்ஙனம் வடிவமைக்கப் பட்டுள்ளது. ஒரு சம தளத்தின் இரு புள்ளிகளுக்கிடையே உள்ள இடைவெளியினைக் கண்டறிய உதவும் நிரல் உதாரணமொன்று வருமாறு:

     float
     distance (p0, p1)
          struct point p0, p1;
     {
       float xdist = p1.x - p0.x;
       float ydist = p1.y - p0.y;
       return sqrt (xdist * xdist + ydist * ydist);
     }

நான் வழக்கமாகப் பயன்படுத்தும் கணினியில் இயக்க வல்ல வடிவத்தில் அதே நிரல் வருமாறு:

     1314258944      -232267772      -231844864      1634862
     1411907592      -231844736      2159150         1420296208
     -234880989      -234879837      -234879966      -232295424
     1644167167      -3214848        1090581031      1962942495
     572518958       -803143692      1314803317

மூல நிரல் நிரலொன்றைப் பயன்படுத்தும் எந்தவொரு பயனருக்கும் பயனுடையதாகும் (இயலும் எனும் அளவிலாவது). ஆனால் பெரும்பாலான பயனர்கள் மூல நிரல்களின் நகல்களைப் பெறுவதற்கு அனுமதிக்கப் படுவதில்லை. தனியுரிம நிரலொன்றின் மூல நிரல் வழக்கமாக எவரும் கற்க இயலாத வண்ணம் அதன் உடைமையாளரால் இரகசியமாக காக்கப் படுகிறது. கணினிகளால் மட்டுமே இயக்க வல்ல புரிந்து கொள்ள இயலாத எண்களைக் கொண்ட கோப்புகளைத் தான் பயனர்கள் பெறுகிறார்கள். இதன் அர்த்தம் நிரலின் உடைமையாளர் மாத்திரமே அந்நிரலை மாற்ற இயலும்.

எனது தோழியொருத்தி ஒருமுறை வர்த்தக் ரீதியாக கிடைக்கக் கூடியதொன்றைப் போன்ற நிரலினை இயற்றிடும் பொருட்டு ஆறு மாதங்கள் வங்கியொன்றில் நிரலாளராகப் பணிபுரிந்ததாகத் தெரிவித்தார். வர்த்தக ரீதியாக கிடைக்கக் கூடிய அந்நிரலின் மூலம் கிடைத்திருந்தால் சுலபமாக தங்களது தேவைக்கேற்றாற் போல் மாற்றியமைத்திருக்க முடியும் எனவும் அவர் நம்பினார். அவ்வங்கி இதற்கென நிதியளிக்கவும் தயாராக இருந்தது. ஆனால் அனுமதிக்கப்படவில்லை—மூல நிரல் இரகசியமானது. ஆகையால் அதனை ஈடு செய்யும் விதமாக ஆறு மாதகாலம் அவர் பணியாற்ற வேண்டியிருந்தது. இப்பணி நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் கணக்கில் கொள்ளப் படுமாயினும் உண்மையில் விரயம் செய்யப் பட்டதேயாகும்.

செராக்ஸ் நிறுவனம் 1977-ம் வருட வாக்கில் வரைகலை அச்சியந்திரம் ஒன்றினை எம்.ஐ.டி யின் ஆர்டிபிஃஸியல் இன்டலிஜன்ஸ் (ஏ.ஐ) ஆய்வகத்திற்கு அன்பளிப்பாக வழங்கியது. அது கட்டற்ற மென்பொருளால் இயக்கப் பட்ட அதில் பல சொகுசான வசதிகளை நாங்கள் சேர்த்துக் கொண்டோம். அச்சுப் பணியொன்று நிறைவடையும் போது பயனருக்கு அறிவிப்பு செய்வது இதற்கு ஒரு உதாரணம். தாள்கள் இல்லாது போகின்ற காரணத்தாலோ, தாள்கள் சிக்கிக் கொள்வதாலோ பிரச்சனை ஏற்படின் வரிசையில் இருக்கும் பணிகளை ஏவிய அனைத்துப் பயனர்களுக்கும் அறிவிப்பு தரப்படும். இவ்வசதிகள் சீரான இயக்கத்திற்கு வழி வகுத்தன.

பின்னர் புதிய அதிகவேக அச்சியந்திரம் ஒன்றினை செராக்ஸ் நிறுவனம் ஏ.ஐ ஆய்வகத்திற்கு வழங்கியது. முதன்முதலில் வெளி வந்த லேசர் அச்சியந்திரங்களில் ஒன்றாகும் அது. அது தனியொரு விசேட கணினியில் இயங்கிக் கொண்டிருந்த தனியுரிம மென்பொருளால் ஆகியிருந்தமையால் நாங்கள் விரும்பிய எந்தவொரு வசதியினையும் அதில் சேர்க்க இயலவில்லை. அச்சுப் பணியொன்று விசேட கணினிக்கு அனுப்படும் போது அறிவிப்புத் தர எங்களால் ஏற்பாடு செய்ய இயலும். ஆனால் பணி அச்சிடப்படும் போதுசெய்ய இயலாது (இடைபட்ட தாமதம் கருத்தில் கொள்ளத் தக்கது). ஒரு பணி அச்சிடப் பட்டதா என அறிய எந்தவொரு வழியும் இல்லை. தங்களால் யூகிக்க மட்டுமே இயலும். மேலும் தாள்கள் சிக்குகின்ற போது யாருக்கும் தெரிவிக்கப்படாதமையால், அச்சியந்திரப் பழுது களையப் படாதவாறே மணிக்கணக்கில் கிடக்க நேர்ந்தது.

நிரல்களை இயற்றியோரைப் போலவே இப்பழுதுகளை களைய வல்ல ஆற்றல் ஏ.ஐ ஆய்வகத்தின் நிரலாளர்களுக்கு இருந்தது. ஆனால் செராக்ஸுக்கு இவற்றைக் களைவதில் ஆர்வமில்லை. நாங்கள் அதனைக் களைவதையும் தடுக்கத் தேர்ந்தார்கள். ஆக பழுதுகளை ஏற்க நாங்கள் பணிக்கப் பட்டோம். அவை ஒருபோதும் களையப் படவில்லை.

சிறந்த நிரலாளர்கள் பலர் இவ்வெரிச்சலை அனுபவித்திருக்கிறார்கள். வங்கியால் துவக்கத்திலிருந்து நிரலை இயற்றி சிக்கலைத் தீர்த்துக் கொள்ள இயலும். ஆனால் எத்தகைய ஆற்றலிருப்பினும் ஒரு சாதாரண பயனருக்கு விட்டுக் கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை.

விட்டுக் கொடுப்பது சுயச் சார்பு சிந்தனைக்கு உளவியல் ரீதியான பாதிப்பினை ஏற்படுத்துகிறது. தங்களின் தேவைக் கேற்றாற் போல் மாற்றி அமைத்துக் கொள்ள இயலாத வீட்டில் வாழ்வதென்பது நம்பிக்கை இழக்கச் செய்வதாகும். ஊக்கமிழக்கவும் விலகவும் செய்து ஒருவரது வாழ்வின் பிற அம்சங்களிலும் பாதிப்பினை ஏற்படுத்த வல்லது. இங்ஙனம் உணரும் மக்கள் மகிழ்ச்சியற்றவராய் நல்ல பணிகளை மேற்கொள்வதில்லை.

மென்பொருளைப் போன்றே சமையற் குறிப்புகளும் ஆகிவிட்டால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். “இச் சமையற் குறிப்பிலிருந்து உப்பினை எப்படி நீக்குவது? ” எனத் தாங்கள் கோரலாம். “ எவ்வளவு துணிச்சலிருந்தால் எமது மூளையால் விளைந்த ருசியை, படைப்பை, அதை சிதைக்கும் வண்ணம் மாற்ற முயற்சிப்பாய்? எமது சமையற் குறிப்பை மாற்றி சரி செய்ய உனக்கு அருகதை இல்லை.” எனத் தலைமைப் பர்சாரகர் தெரிவிப்பார்.

“எனது மருத்துவரோ நான் உப்பு சேர்த்துக் கொள்ளக் கூடாது என்கிறார். நான் என்ன செய்வது? நீங்களா அந்த உப்பை எனக்காக எடுத்துத் தருவீர்கள்?”

“அதைச் செய்ய சித்தமாயுள்ளேன். அதற்கான விலை வெறும் 50,000 டாலர் மாத்திரமே.” மாற்றங்களின் மீது உடைமையாளருக்கு எதேச்சாதிகாரம் இருப்பதால் கட்டணம் மிகப் பெரியதாகிறது. “ ஆனால் தற்போது எனக்கு நேரமில்லை. கப்பற் துறைக்கான புதிய பிஸ்கட்டின் சமையற் குறிப்பினை வடிவமைப்பதற்கான குழுவில் மும்மரமாக உள்ளேன். தங்களின் பால் திரும்பி வர இரண்டு வருடம் ஆகலாம்!”

மென்பொருள் உருவாக்கத்திற்குத் தடை

மூன்றாவது நிலையிலான பொருட் தீமையானது மென்பொருள் உருவாக்கத்தினை பாதிக்கின்றது. பரிணாம வளர்ச்சிக் கொண்ட முறையாக மென்பொருள் உருவாக்கம் இருந்து வந்தது. நிரலாளர் ஒருவர் கிடைக்கக் கூடிய நிரலொன்றை எடுத்து புதிய வசதிகளுக்காக அதன் பகுதிகள் சிலவற்றை மாற்றி எழுதுவார். மற்றொருவர் பிரிதொரு வசதிக்காக அதன் வேறு பகுதிகளை மாற்றி எழுதுவார். சில உதாரணங்களில் இவை இருபது ஆண்டுகள் வரை கூடத் தொடரும். இதற்கிடையில் இதன் பகுதிகள் “பிரித்தெடுக்கப்பட்டு” மற்ற நிரல்களின் துவக்கத்திற்குப் பயன்படுத்தப்படும்.

உடைமையாளர்களின் இருப்பு இத்தகைய பரிணாமத்தினைத் தடைச் செய்கிறது. நிரலொன்றினை உருவாக்கும் போது மீண்டும் துவக்கத்திலிருந்து தொடங்கு வதை அவசியமாக்குகிறது. கிடைக்கக் கூடிய நிரல்களைக் கற்று பயனுள்ள நுட்பங்களையோ பெரிய நிரல்கள் வடிவமைக்கப்படும் விதங்களையோ அறிந்திடா வண்ணம் புதிய பயிற்சியாளர்களைத் தடுக்கிறது.

கல்விக்கும் உடைமையாளர்கள் தடை ஏற்படுத்துகிறார்கள். பெரிய நிரலொன்றின் மூல நிரல்களைக் கண்டிராத புத்திசாலி மாணவர்களை நான் சந்தித்ததுண்டு. அவர்கள் சிறிய நிரல்களை எழுதுவதில் திறமையுள்ளவர்களாக இருக்கலாம். ஆனால் பெரிய நிரல்களை இயற்றத் தேவையான பலவிதமான ஆற்றல்களை, பிறர் எவ்வாறு செய்திருக்கிறார்கள் எனக் காணாது கற்கத் துவங்க இயலாது.

அறிவார்ந்த எந்தவொரு துறையிலும் ஒருவர் பிறரது தோள்களில் ஏறியவாறே உயர்ந்த நிலைகளை அடைய இயலும். ஆனால் அது மென்துறையில் அனுமதிக்கப் படுவதில்லை. — தங்கள் நிறுவனத்தை சார்ந்த பிற மக்களின் தோள்களில் மாத்திரமே தங்களால் ஏற முடியும்.

இத்துடன் தொடர்புடைய உளவியல் தீமையானது அறிவியல் ரீதியான கூட்டுறவுக்கான உள்ளுணர்வினைப் பாதிக்கின்றது. தங்களுடைய நாடுகள் போரிட்டுக் கொண்டிருந்தாலும் கூட இவ்வுணர்வானது மிக உறுதியாக இருந்தமையால் விஞ்ஞானிகள் ஒத்துழைத்து வந்தனர். இவ்வுள்ளுணர்வினால் ஜப்பானிய கடலாளர்கள் பசிபிக்கின் தீவொன்றில் இருந்த தங்கள் ஆய்வகமொன்றினை கிடப்பில் போட்டு ஆக்ரமிக்கும் யு.எஸ் கப்பல்களுக்காக தங்களது பணிகளைக் கவனமாகக் காத்து, அவற்றை அவர்களை நல்லபடியாக கவனித்துக் கொள்ளும் படி குறிப்பு கொடுத்து வரவும் முடிந்தது.

சர்வதேச பகையால் வளர்ந்தவற்றை இலாபத்துக்கான பகை மூழ்கடித்துவிட்டது. தற்பொழுதெல்லாம் பலத் துறைகளில் விஞ்ஞானிகள் தங்களின் ஆய்வறிக்கைகளில் பிறரும் சோதனைகளை மேற்கொள்ளத் தக்கச் செய்யுமளவிற்குப் போதுமான விவரங்களை பதிப்பிப்பது இல்லை. இவர்கள் எவ்வளவு செய்துள்ளனர் என வாசிப்பவர் ஆச்சரியப்படப் போதுமானவிவரங்களை மட்டுமே அவர்கள் பதிப்பிக்கிறார்கள். அறிக்கை செய்யப்படும் நிரல்களின் மூலம் வழக்கமாக இரகசியமாக இருக்கும் கணினித் துறையில் இது உறுதியான உண்மை.

பகிர்வது எவ்வாறு தடுக்கப் படுகிறது என்பது பொருட்டல்ல

நிரல்களை படியெடுக்க, மாற்ற, மீளுருவாக்க மக்களைத் தடுப்பதால் ஏற்படும் விளைவுகளை நான் அலசி வந்தேன். இத்தடை எவ்வாறு விதிக்கப் படுகிறது என்பதை நான் குறிப்பிடவில்லை. ஏனெனில் அது முடிவை பாதிப்பதில்லை. நகல் பாதுகாப்பு, பதிப்புரிமை, உரிமங்கள், உருதிரிப்பு அல்லது வாசிக்க மட்டும் கூடிய நினைவுத் தகடுகள், அல்லது வன்பொருட் தொடர் எண்கள் என எதனைக் கொண்டு செய்தாலும், பயன்பாட்டைத் தடுப்பதில் இவை வெற்றி பெறுமாயின் அது நிச்சயம் கேடு செய்கிறது.

பயனர்கள் இம்முறைகளுள் ஒன்றைக் காட்டிலும் மற்றொன்று அதிகம் ஆட்சேபிக்கத் தக்கது எனக் கருதுவதுண்டு. தங்கள் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளும் முறைகளே அதிகம் வெறுக்கத்தக்கதென நான் பரிந்துரைக்கின்றேன்.

மென்பொருள் கட்டற்று இருக்க வேண்டும்

நிரலுக்கு உடைமையாளர் இருப்பது அதாவது நிரலொன்றை நகலெடுப்பதையோ மாற்றுவதையோ தடுப்பது எவ்வாறு கேடு விளைவிப்பதாக இருக்கும் என்பதை நான் எடுத்துக் காட்டியுள்ளேன். அதன் தீய விளைவுகள் பரவிக் கிடப்பதோடு முக்கியமானதும் கூட. சமூகமானது நிரல்களுக்கு உடைமையாளார்களைக் கொண்டிருக்கக் கூடாது என இது வழிமொழிகிறது.

வேறு விதமாக இதனைப் புரிந்துக் கொள்ள வேண்டுமானால், சமூகத்தின் தேவை கட்டற்ற மென்பொருள். அதற்கான மட்டமான மாற்றே தனியுரிம மென்பொருள். நமக்குத் தேவையானதை பெறுவதற்கு இம்மாற்றை ஊக்குவிப்பது பகுத்தறிவுள்ள செயலாகாது.

“ஒரு விடயம் நல்லது என்பதற்காக அதற்காக வேலை செய்யுங்கள்; மாறாக அதில் வெற்றிப் பெறுதற்கான வாய்ப்பிருக்கும் என்பதனால் அன்று.” என வேக்லேவ் ஹேவல் நமக்கு அறிவுறுத்தியிருக்கின்றார். தன்னுடைய குறுகிய கூறுகளில் வர்த்தம் பேணும் தனியுரிம மென்பொருள் வெற்றிக்கானதொரு வாய்ப்பாக இருக்கலாம், ஆனால் சமூகத்திற்கு நல்லதாக ஆகாது.

மக்கள் மென்பொருளை ஏன் உருவாக்குவார்கள்

மக்கள் மென்பொருளை உருவாக்கிட ஊக்கம் தரும் வழிமுறையாக பதிப்புரிமையை அகற்றிவிடுவோமாயின், துவக்கத்தில் குறைவான மென்பொருளே உருவாக்கப்படும். ஆனால் அந்த மென்பொருள் அதிகப் பயனுள்ளதாக இருக்கும். பயனருக்கு அளிக்கப்பட்ட ஒட்டுமொத்த திருப்தி குறைவாக இருக்குமா என்பதில் தெளிவில்லை. அப்படியே இருந்தாலோ அல்லது நாம் அதனை எவ்வழியிலாவது மேம்படுத்த விரும்பினாலோ, சோதனைச் சாவடிகள் இல்லாது நிதித் திரட்ட வழி இருப்பது போல், உருவாக்கத்தினை ஊக்குவிக்க வேறு பல வழிகள் உள்ளன. அதனை சாத்தியமாக்கும் வழிகளைப் பற்றி சொல்வதற்கு முன், செயற்கையான ஊக்கத்தின் உண்மையானத் தேவை எவ்வளவு என்பதனை கேள்விக்குள்ளாக்க விரும்புகின்றேன்.

நிரலாக்கம் ஒரு சுகம்

பணத்திற்காகவே சிலர் நுழையக்கூடிய சில வகையான தொழில்கள் உண்டு. உதாரணத்திற்கு சாலை நிர்மாணம். கலை மற்றும் ஏனையக் கல்வித் துறைகள் இருக்கின்றன. அவற்றைக் கொண்டு செல்வம் செழிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. தங்களுக்கு இருக்கும் அதீத ஆர்வத்தினாலோ அல்லது சமூகம் பற்றிய ஆழப்பதிந்த மதிப்பீட்டினாலோ மக்கள் இத்துறைகளில் நுழைவார்கள். கணித தர்க்கம், கருநாடக சங்கீதம், தொல்லியல் துறை, gபணிபுரியும் மக்களை அரசியல் ரீதியாக ஒருங்கிணைப்பது இதற்கான உதாரணங்களாகும். கிடைக்கக் கூடிய நிதியொதுக்கப்பட்ட சில பதவிகளுக்காக, கசப்பான முறையில் என்பதை விட வருத்தத்திற்குரியவர்களாக மக்கள் போட்டியிடுகிறார்கள். இப்பதவிகள் எதுவுமே மிகச்சிறந்த நிதியொதுக்கீட்டினை பெறுவது கிடையாது. இத்துறைகளில் பணி புரிய வாய்ப்புக் கிடைத்திட வேண்டி அவர்களால் இயலுகிற பட்சத்தில் நிதி அளிக்கக் கூட அவர்கள் முன்வருவதுண்டு.

செல்வம் கொழிக்கும் சாத்தியங்களை கொடுக்கத் துவங்குகிற பட்சத்தில் ஓரிரவுப் பொழுதில் இத்தகையத் துறை தன்னைத் தானே மாற்றிக் கொள்ள வல்லது. ஒரு தொழிலாளி செல்வந்தராகும் பொழுது, பிறரும் அதே வாய்ப்பினைக் கோருவார்கள். திடீரென்று எல்லாரும் எதனைச் சுகமாகக் கருதிச் செய்து வந்தனரோ அதற்காக மிகப் பெரிய அளவிலான தொகையினைக் கேட்கத் துவங்கலாம். இன்னும் இரண்டு வருடங்கள் கழிகிற போது, அத்துறையுடன் தொடர்புடைய அனைவரும் பெரிய நிதி ஆதாயம் பெறாது அத்துறையில் பணி நடைபெறும் எனும் எண்ணத்தையே சிதைத்து விடுவார்கள். இத்தகைய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்து கொள்ளும் பொருட்டு இவர்கள் சமூகத் திட்டம் தீட்டுவோருக்கு, சிறப்பு சலுகைகள், அதிகாரங்கள் மற்றும் எதேச்சாதிகாரங்கள் அங்ஙனம் செய்வதற்கு அவசியம் என பரிந்துரைப்பர்.

கடந்த பத்து ஆண்டுகளில் இந்த மாற்றம் கணினி நிரலாக்கத் துறையில் ஏற்பட்டது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன் “கணினிக்கு நேர்ந்து விடுவது” குறித்தக் கட்டுரைகள் இருந்தன. பயனர்கள் “இணையத்தில் இருந்ததொடு” வாரத்திற்கு நூறு டாலர்கள் போன்ற பழக்கங்கள் இருந்தன. மண வாழ்க்கையைக் கூட முறித்துக் கொள்ளும் அளவிற்கு மக்கள் நிரலெழுதுவதை அதிகம் காதலித்ததாக பொதுவாக புரிந்து கொள்ளப்பட்டிருந்தது. இன்று அதிக சம்பள விகிதம் இல்லையென்றால் யாருமே நிரலெழுத மாட்டார்கள் என்பதே பொதுவாகப் புரிந்துக் கொள்ளப் பட்டிருக்கின்றது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னதாகத் தங்களுக்கு தெரிந்திருந்ததை மக்கள் மறந்து விட்டார்கள்.

கொடுக்கப்பட்ட ஒரு கால கட்டத்தில் அதிக சம்பளத்திற்கு தான் குறிப்பிட்டத் துறையொன்றில் பெரும்பாலான மக்கள் பணிபுரிவார்கள் என்பது உண்மையாக இருந்தாலும் அதுவே உண்மையாகத் தொடர வேண்டியதில்லை. சமுதாயம் உத்வேகம் அளித்தால் மாற்றம் மீண்டும் மீள வரும். அதிகமான வளத்துக்கான சாத்தியக் கூறுகளை நாம் எடுத்து விட்டால், சில காலம் கழித்து, தங்களின் மனோபாவத்தினை மக்களும் மீண்டும் மாற்றிக் கொண்ட பின்னர், பணிநிறைவில் கிடைக்கும் சுகத்திற்காக அதே துறையில் பணிபுரிய அவர்களும் மீண்டும் ஆர்வம் கொள்வர்.

“நிரலாளர்களுக்கு நாம் எவ்வாறு சம்பளம் கொடுப்பது?” எனும் கேள்வி, அவர்களுக்கு ஏதோ பெரும் போகத்தினை நாம் அளிக்கப் போவதில்லை என்பதனை உணர்வதனால் எளிதாகிவிடும். இயல்பான வாழ்வு வாழ என்பது எழுப்புதற்கு எளிதாகும்.

கட்டற்ற மென்பொருளுக்கு நிதியளிப்பது

மென்பொருள் நிலையங்கள் தான் நிரலாளர்களுக்கு நிதி அளிக்க வேண்டுமென்ற கட்டாயமில்லை. இப்பணியை செய்ய வல்ல இன்ன பிற அமைப்புகள் ஏற்கனவே இருக்கின்றன.

தங்களால் கட்டுபடுத்த இயலாத ஒன்றாக இருக்கும்போதிலும் வன்பொருள் உற்பத்தியாளர்கள் மென்பொருள் உற்பத்தியினை ஆதரிப்பதை இன்றியமையாததாக கருதுகிறார்கள். 1970 களில் அவர்களின் பெரும்பாலான மென்பொருட்கள் கட்டற்று இருந்தன. ஏனெனில் அவர்கள் அதைக் கட்டுப்படுத்த வேண்டுமென நினைக்கவில்லை. இன்று, கூட்டமைப்புகளில் சேர்வதில் அவர்கள் காட்டும் ஆர்வம், அவர்கள் மென்பொருளின் மீது உரிமைக் கோருவதில் உண்மையில் முக்கியத்துவம் இல்லை என்பதை உணர்ந்திருப்பதைக் காட்டுகின்றது.

பல்கலைக் கழகங்கள் பல நிரலெழுதும் போட்டிகளை நடத்துகின்றன. இன்று அவர்கள் கூட தங்களின் முடிவுகளை விற்கிறார்கள். ஆனால் 1970 களில் இவர்கள் இப்படிச் செய்தது கிடையாது. விற்க அனுமதிக்காது போனாலும் பல்கலைக் கழகங்கள் கட்டற்ற மென்பொருளினை உருவாக்குவார்கள் என்பதில் ஏதேனும் ஐயம் உள்ளதா? தற்பொழுது தனியுரிம மென்பொருட்கள் உருவாக்கப் பயன்படும் அரசு ஒப்பந்தங்களையும் நிதி ஒதுக்கீடுகளையும் கொண்டே இத்திட்டங்கள் ஆதரிக்கப் படலாம்.

ஒரு பொருளை உருவாக்கும் பொருட்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நிதியுதவிப் பெறுவதும் , அதனை பூர்த்தியாகும் அளவிற்கு உருவாக்குவதும் , நிறைவடைந்ததாக அறிவிப்பதும், பின்னர் நிறுவனங்களை துவங்கி உண்மையாகவே அதனை நிறைவு செய்து பயனுடையதாக ஆக்குவதும் இன்று மிகச் சாதாரணம். நிறைவடையாத வெளியீட்டினை இலவசமாக அவர்கள் அறிவிப்பதுண்டு. மாறாக அவர்கள் முற்றிலும் மோசமானவர்களாக இருந்தால் பல்கலைக் கழகத்திலிருந்து தனித்துவமான உரிமத்தினை பெறுவார்கள். இது ஏதோ இரகசியமன்று. சம்பந்தப் பட்ட அனைவரும் அப்பட்டமாக ஏற்றுக் கொள்கின்றனர். இச்செயல்களைச் செய்யத் தூண்டப்படாதிருந்தால், அவர்கள் தொடர்ந்து தங்களின் ஆய்வினை மேற்கொண்டிருப்பார்கள்.

கட்டற்ற மென்பொருளெழுதும் நிரலாளர்கள் அம்மென்பொருள் சார் சேவைகளை வழங்குவதின் மூலம் தங்களின் வாழ்க்கையினை மேற்கொள்கிறார்கள். நான் குனு சி ஒடுக்கியினை புதியதொரு வன்பொருளொன்றுக்கு உகந்ததாக்கவும் குனு ஈமாக்ஸ்ஸின் பயனர்-இடைமுகப்புகள் உருவாக்கவும் பணியமர்த்தப் பட்டேன். (இம்மேம்பாடுகள் பூத்தியானதும் பொதுமக்களுக்கு அளித்துவிடுவேன்.) மேலும் பாடம் நடத்துவதன் பொருட்டும் எமக்கு ஊதியமளிக்கப்பட்டது.

இம்முறையில் பணி செய்வது நான் மாத்திரமல்ல. வேறு விதமான பணியினை மேற்கொண்டுள்ள, வெற்றிகரமாக வளர்ந்து வரும் ஒரு நிறுவனமும் உள்ளது. ஏனையப் பிற நிறுவனங்களும் குனுவின் கட்டற்ற மென்பொருளுக்கு வர்த்தக ரீதியான ஆதரவு வழங்குகிறார்கள். சுதந்தரமான மென்பொருள் ஆதரவு தொழில் துறையின் துவக்கம் இது. கட்டற்ற மென்பொருள் பிரபலமாகும் போது இது மிகப் பெரியதாகும். தனியுரிம மென்பொருளால் வசதியுள்ள மிகச் சிலருக்கே தர வல்ல வாய்ப்பினை இது பயனர்களுக்குத் தருகின்றது.

கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை போன்ற புதிய நிறுவனங்களும் நிதியளிக்கலாம். அறக்கட்டளைக்கான நிதி பெரும்பாலும் பயனர்கள் மடல் மூல வாங்கும் டேப்களுக்காக வருகின்றன. டேப்புகளில் உள்ள மென்பொருட்கள் கட்டற்றவை. அதாவது அவற்றை நகலெடுக்கவோ மாற்றவோ எந்தவொரு பயனருக்கும் சுதந்தரம் உண்டு.(கட்டற்ற மென்பொருளென்பது விலையினை அடிப்படையாகக் கொள்ளாது சுதந்தரத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதை நினைவில் கொள்க.) ஏற்கனவே நகலொன்றை வைத்திருந்தாலும் நாங்கள் நிதி அளிக்க உகந்தவர்களாகக் கருதி மீண்டும் டேப்புகளுக்கு விண்ணப்பம் செய்வதுண்டு. கணினி உற்பத்தியாளர்களிடமிருந்தும் இவ்வறக்கட்டளை தானம் பெறுகின்றது.

கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை ஒரு தொண்டு நிறுவனம், அதன் வருவாய் இயன்றவரையில் நிரலாளர்களைப் பணியமர்த்த செலவிடப் படுகின்றது. அது ஒரு வர்த்தக நிறுவனமாக நிறுவப்பட்டிருந்தால், அதே கட்டற்ற மென்பொருளை பொது மக்களுக்கு விற்பதின் மூலம், அதன் நிறுவனருக்கு இந்நேரம் மிகச் சொகுசான வாழ்வினை அளித்திருக்கும்.

இவ் அறக்கட்டளைத் தொண்டு நிறுவனமாக இருக்கின்றக் காரணத்தினால், வேறு இடங்களில் கிடைக்கக் கூடிய ஊதியத்தினைக் காட்டிலும் பாதிக்கு நிரலாளர்கள் பணிபுரிகிறார்கள். ஏனெனில் நாங்கள் அதிகாரத் தன்மையற்று இருப்பதாலும், அவர்களின் பணியின் பலன் பயன்பாட்டிலிருந்து தடுக்கப்படாது என்கிற நிம்மதியாலும் இங்ஙனம் செய்ய அவர்கள் முன்வருகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக அவர்கள் இன்பம் என இதனைக் கருதுவதால் செய்கிறார்கள். இதைத் தவிர தன்னார்வலர்கள் பலரும் எங்களுக்கு நிரலெழுதித் தந்திருக்கின்றார்கள். (தொழிநுட்ப எழுத்தாளர்கள் கூட முன்வரத் துவங்கியுள்ளார்கள்)

நிரலெழுதுவது கலை, இசையைப் போன்றே அதிசயிக்கத் தக்க துறையென்பது இதன் மூலம் உறுதியாகின்றது. யாரும் நிரலெழுத விரும்ப மாட்டார்கள் எனக் கவலைக் கொள்ளத் தேவையில்லை.

உருவாக்குவோருக்கு பயனர்களின் பிரதியுபகாரம் என்ன?

மென்பொருளினைப் பயன்படுத்துவோர் அதனை ஆதரிக்க தார்மீக உணர்வுக் கொள்ள நல்லதொருக் காரணம் இருக்கின்றது. பயனர்களின் செயல்களுக்காக கட்டற்ற மென்பொருளினை உருவாக்குவோர் பங்களிக்கின்றனர். தொலை நோக்குப் பார்வையிலும் நியாயமாகவும் சேவைகளைத் தொடர பயனர்கள் உருவாகுவோருக்கு நிதியளிப்பது உகந்தது.

ஆனால், தனியுரிம மென்பொருள் உருவாக்குவோருக்கு இது பொருந்தாது. தடை ஏற்படுத்துவதென்பது சன்மானத்திற்கு அல்ல மாறாக தண்டனைக்கு ஏற்றது.

நாம் ஒரு தர்ம சங்கடமான நிலையில் நிற்கிறோம். பயனுள்ள மென்பொருளை உருவாக்குவோர் அதன் பயனர்களின் அதரவுக்கு பாத்திரமாகின்றார். இந்த தார்மீக திலுதவியை ஒரு கட்டாயத் தேவையாக ஆக்குவதென்பது பதிலுதவியின் அடிப்படையினையே ஆட்டம் காணச் செய்கின்றது. உருவாக்கும் ஒருவர் சன்மானத்திற்கு உகந்தவராகின்றார் அல்லது அதனைக் கட்டாயமாகக் கேட்கிறார், ஆனால் இரண்டும் ஒரு சேர அன்று.

இத்தகைய தர்ம சங்கடமான நிலையைச் சந்திக்கும் அறத்தின் வழி நிற்கும் உருவாக்குநரொருவர், சன்மானத்திற்கு உகந்தவராக செயல் புரிய வேண்டும். அதே நேரத்தில் பயனர்களையும் தானாக முன்வந்து நிதியளிக்க ஊக்கப் படுத்தவேண்டும். பொது வானொலி மற்றும் பொது தொலைக் காட்சிகளை ஆதரிக்கக் கற்றது போலவே, கட்டாயமேதும் இல்லாமலேயே பயனர்களும் உருவாக்குவோரை ஆதரிக்கக் கற்பார்கள்.

மென்பொருள் உற்பத்தித் திறனென்றால் என்ன?

மென்பொருள் கட்டற்று இருக்குமாயின், நிரலாளர்கள் இருப்பார்கள், ஆனால் சிறிய அளவிலேயே இருப்பார்கள். இது சமூகத்திற்கது தீமையானதா?

அப்படியொன்றும் அவசியம் இல்லை. இன்று முன்னேறிய நாடுகள் 1900 களைக் காட்டிலும் குறைந்த விவசாயிகளைக் கொண்டுள்ளனர். ஆனால் நாம் இவற்றை சமூகத்திற்கு தீமையாகக் கருதுவதில்லை. ஏனெனில் இந்தச் சிறிய அளவிலானோர், பலர் செய்ததைக் காட்டிலும், நுகர்வோருக்குத் தேவைக்கும் அதிகமான உணவினை உற்பத்திச் செய்கின்றனர். மென் உற்பத்தித் திறன் அனைத்து நிலைகளிலும் அதிகரிக்கும் போது, தேவையினைப் பூர்த்தி செய்ய கட்டற்ற மென்பொருளுக்கு குறைந்த அளவிலான நிரலாளர்களே தேவை:

குறைந்த நிரலாளர்களுக்கே வேலைகிடைக்கும் எனக் கூறி, கூட்டுறவினை எதிர்ப்போர் , உண்மையில் மேம்படுத்தப்பட்ட உற்பத்தித் திறனையே எதிர்க்கின்றனர். ஆயினும் இம்மக்கள் மென்துறையின் உற்பத்தித் திறன் மேம்படுத்தப் படவேண்டும் என்ற பரவலானக் கருத்தினையும் ஆமோத்திக்கின்றனர். ஆனால் எப்படி?

“மென்பொருள் உற்பத்தித் திறன்” என்பது இரண்டு மாறுபட்ட விடயங்களாக இருக்கலாம். அனைத்து மென்பொருள் உற்பத்தியின் ஒட்டுமொத்த உற்பத்தித் திறனின் மேம்பாடு. அல்லது தனித் திட்டங்களின் உற்பத்தித் திறனின் மேம்பாடு. ஒட்டுமொத்த உற்பத்தித் திறனையே சமூகம் மேம்படுத்த விரும்பும். இதனைச் செய்வதற்கான நேரடி வழி இவற்றை மட்டுப் படுத்தி , கூட்டுறவிற்கு பங்கம் விளைவிற்கும் செயற்கைத் தடைகளை அகற்றுவதே. ஆனால்“மென் உற்பத்தித் திறனை” ஆராயும் ஆய்வாளர்கள், குறுகிய அளவிலான இரண்டாவது முறையிலேயே கவனம் செலுத்துகிறார்கள். ஆனால் மேம்பாடு என்பதோ கடினமான தொழில்நுட்பத் தேவைகளை உள்ளடக்கி நிற்கிறது.

போட்டி தவிர்க்க இயலாததா?

சமூகத்தில் தங்களின் எதிரிகளை முந்துவதன் பொருட்டு, மக்கள் போட்டி போட முற்படுவது தவிர்க்க இயலாததா? ஒருவிதத்தில் ஆமாம் தான். ஆனால் போட்டி தீமையானது அல்ல. தீமையானதோ போர்.

போட்டியிடப் பல வழிகள் உள்ளன. அடுத்தவர் செய்திருப்பதைக் காட்டிலும் அதிகம் சாதிக்க முயற்சிப்பது முதலியவற்றைப் போட்டி உள்ளடக்கி இருக்கலாம். உதாரணத்திற்கு முன்பெல்லாம், நிரலெழுதும் பராக்கிரமசாலிகளுக்கு இடையே போட்டிகள் இருக்கும். கணினியினை அதிசயிக்கத் தக்க பணியினை செய்யவைக்க யாரால் இயலும் அல்லது கொடுக்கப் பணியினை சுருக்கமாகவோ, வேகமாகவோ செய்யக் கூடிய நிரலை யாரால் இயற்ற முடியும் போன்ற போட்டிகள் இருப்பதுண்டு. நல்லதொரு ஒழுக்கச் சீலம் கடைபிடிக்கப் படும் வரை இத்தகைய போட்டிகள் அனைவரைக்கும் நன்மைப் பயக்கும்.

அதிக ஆற்றலை வெளிப்படுத்த, மக்களை ஊக்குவிக்கும் பொருட்டு இத்தகைய ஆக்கப் பூர்வமான போட்டிகள் போதுமானவை. உலகின் அனைத்து நாடுகளையும் சுற்றிவிட வேண்டும் என பலர் போட்டிப் போடுகின்றனர். சிலர் இதற்காக கொட்டிக் கொடுக்கிறார்கள். ஆனால் இதற்கென கப்பற் தலைவனுக்கு பணம் கொடுத்து அவர்களுடன் போட்டியிடுவோரை யாருமற்ற தீவில் இறக்கி விடச் சொல்லுவதில்லை. சிறந்தவர் வெற்றிப் பெறட்டும் என்பதில் நிறைவு கொள்கிறார்கள்.

தங்களை முன்னேற்றிக் கொள்ளாமல் அடுத்தவரை வீழ்த்த முற்படும் பொழுது போட்டி போராகின்றது. சிறந்தவர்கள் வெற்றிப் பெறட்டும் என்பது போய், சிறந்தவனோ இல்லையோ தான் வெற்றிப் பெற வேண்டும் என்பதற்கு வழி கோளுகின்றது. தனியுரிம மென்போருள் தீமையானது. அது ஒருவகைப் போட்டியென்பதால் அல்ல. மாறாக நம் சமூகத்தின் குடிமக்களிடையேயான ஒருவகைப் போர் என்பதால்.

வர்த்தகப் போட்டி என்பது போராக அமைய வேண்டும் என்பதில்லை. உதாரணத்திற்கு இரண்டு மளிகைக் கடைகள் போட்டியிடும் போது அவர்களின் முழு ஈடுபாடும் தங்களின் செயல்களை எவ்வாறு மேம்படுத்த வேண்டுமென்பதே. எப்படி அடுத்தவரை நசுக்க வேண்டும் என்பது அல்ல. வர்த்தக அறத்திற்கு சிறப்பானதொரு ஏற்பினை இது பிரதிபலிப்பதாக ஆகாது. வலுப் பிரயோகமற்ற போர் போன்றதொரு சூழலுக்கு இவ்வகையான வியாபாரத்தில் சிறிய வாய்ப்பு இருக்கின்றது. அனைத்து விதமான வர்த்தகமும் இத்தகைய குணநலன்களைக் கொண்டிருப்பதில்லை. அனைவரது முன்னேற்றத்துக்கும் பயன்படக் கூடிய தகவலை தடுத்து வைத்துக் கொள்வதென்பது ஒரு வகைப் போர்தான்.

போட்டிக்காக போர் செய்யத் தூண்டப்படுவதை கட்டுபடுத்தும் ஆற்றலை, வர்த்தகக் கொள்கைகளால் மக்களிடையே உருவாக்க இயலாது. சில வகையான போர்கள், அவநம்பிக்கைச் சட்டங்கள், விளம்பரத்தில் உண்மைக்கானச் சட்டங்கள் முதலியவற்றால் தடைச் செய்யப் பட்டுள்ளன. பொதுப்படையாக கொள்கையளவில் பொதுவாகவே போரினைப் புறந்தள்ளாது, அதிகாரிகள் வேறுவிதமான போர்களை உருவாக்குகிறார்கள். இவைக் குறிப்பிட்டுத் தடைச் செய்யப் பட்டவையல்ல. சமூக வளங்கள் வகுப்புவாதப் பொருளாதார உள்நாட்டுச் சண்டைகளுக்காக வீணடிக்கப் படுகின்றன.

“தாங்கள் ஏன் ரஷ்யாவுக்குப் போகக் கூடாது?”

அமேரிக்காவில் பிறர் குறுக்கீட்டினை அறவே அனுமதிக்காத, அதீத சுயநலத்தைத் தவிர வேறெதுவுமற்ற வழக்குரைஞர்களை விடுத்து ஏனைய எவரும் இக்குற்றச்சாட்டுகளை அடிக்கடிக் கேட்டிருகின்றனர். தொழில் வளர்ச்சியடைந்த பிற தேசங்களில் இருப்பது போல் தேசிய மயமாக்கப் பட்ட சுகாதார வசதியினை ஆதரிப்போருக்கு எதிராக இக்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப் படுவதுண்டு. முன்னேறிய நாடுகளில் இருப்பதுபோல் கலைக்கு பொதுத்தன்மைக் கோருவோருக்கு எதிராகவும் இவை சுமத்தப் படுவதுண்டு. பொது நலத்திற்கு உகந்த எந்தவொரு சிந்தனையும் அமேரிக்காவில் கம்யூனிசமாக அடையாளங் காணப்படுகின்றன. ஆனால் இச்சிந்தனைகள் எவ்வளவு ஒத்துப் போகின்றன?

சோவியத் யூனியனில் கடைப் பிடிக்கப்பட்ட கம்யூனிஸம் மையப் படுத்தப் பட்ட அதிகார முறையாகும். அனைத்து செயல்களும் பொது நன்மையென்றப் பெயரில், ஆனால் உண்மையில் கம்யூனிசக் கட்சியின் உறுப்பினர்களுக்காகக் கடுமையாக முறைப்படுத்தப்படும். அங்கே நகலெடுக்கும் கருவி சட்டவிரோதமாக நகலெடுப்பதைத் தடுக்கும் பொருட்டு கவனமாகக் காக்கப்படும்.

மென்பொருளுக்கான அமேரிக்க பதிப்புரிமை முறையானது, நிரல் விநியோகத்தின் மீது மையப் படுத்தப் பட்ட அதிகார முறையை ஏற்படுத்துகிறது. சட்டத்துக்குப் புறம்பாக நகலெடுப்பதை தடுத்திட வேண்டி, தானாக நகலெடுக்க இயலாத முறைகளைக் கொண்டு நகலெடுக்கும் இயந்திரங்களை தடுக்கின்றது.

மாறாக, மக்கள் தங்களின் செய்கைகளைத் தாங்களே தீர்மானிக்கும் சுதந்தரமான முறையினை ஏற்படுத்த பணியாற்றுகின்றேன். குறிப்பாக, தங்களின் சுற்றத்தாருக்கு உதவிடும் சுதந்தரம் மற்றும் தாங்கள் அன்றாடம் பயன்படுத்தப் படும் கருவிகளைத் தாங்களே மாற்றவும் மேம்படுத்தவும் கூடிய சுதந்தரம் போன்றவை. மையப் படுத்தப் படாத பரஸ்பர ஒத்துழைப்பினைக் கொண்ட ஒரு முறை.

ஆக, நாம் ரஷ்ய கம்யூனிசத்துக்கு ஒப்பாக இக்கண்ணோட்டதை அணுகினால், மென்பொருள் உடைமையாளர்களென்போர் கம்யூனிஸ்டுகளாவர்.

வரம்புகள் பற்றிய வினா

இவ்வுரையில் நான் மென்பொருளொன்றின் பயனரொருவர் அதனை உருவாக்கியவரைக் காட்டிலும், அல்லது உருவாக்கியவரை பணி அமர்த்தியவரைக் காட்டிலும் எவ்வகையிலும் குறைந்தவரல்ல என அனுமானம் கொள்கின்றேன். வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால் எவ்வகையிலான செயல் மேற்கொள்ளத்தக்கது என நாம் தீர்மானிக்கின்ற பொழுது அவைகளின் நலன்களும் தேவைகளும் சமமாக மதிக்கத் தக்கவை.

இவ்வரம்பு அகிமனைத்திலும் ஏற்கப் படுவதில்லை. பலர் இயற்றியவரின் பணியமர்த்துநர் மற்ற எவரைக் காட்டிலும் அடிப்படையில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவர் எனக் கொள்கின்றனர். பொதுமக்களை இது எவ்வளவு பாதிக்கக் கூடும் என்பதைக் கருத்தில் கொள்ளாது இவர்கள், மென்பொருளுக்கு உடைமையாளர்கள் இருப்பது, அதனை இயற்றிவரின் பணியமர்த்துனருக்கு அவர்க்குரிய சலுகையினை வழங்குவதாகும் எனச் சொல்கின்றனர்.

இவ்வரம்புகளை நிரூபிப்பதிலோ மறுப்பதிலோ எந்த பயனும் இல்லை. பகிர்ந்து கொள்ளப்பட்ட வரம்புகளுக்கே நிரூபணம் அவசியம். நான் சொல்ல விழைந்தனவற்றுள் பெரும்பாலானாவை, எமது வரம்புகளைப் பகிர்ந்துக் கொள்வோர் அல்லது இவற்றின் விளைவுகளில் சிறிதேனும் ஆர்வமுடையோருக்குத் தான். உடைமையாளர் தான் மற்ற எல்லோரைக் காட்டிலும் முக்கியமானவர் என நம்புவோருக்கு இவ்வுரை சம்பந்தமில்லாதது.

ஆனால் அதிக அளவிலான அமேரிக்கர்கள் ஏன் மற்ற எல்லாரைக் காட்டிலும் சிலரை உயர்த்தும் வரையறைகளை ஏற்கிறார்கள்? அமேரிக்க சட்ட மரபுகளுக்கு இவ்வரையறை உட்பட்டது என நம்புவது காரணத்தின் ஒரு பகுதி. சிலர் இவ் வரையறையினைச் சந்தேகிப்பதென்பது சமூகத்தின் அடிப்படையினையே எதிர்ப்பதாகக் கருதுகிறர்கள்.

இவ்வரையறை நமது சட்ட மரபுகளின் பகுதியாகாது என்பதை இவர்கள் அறிவது முக்கியமான ஒன்றாகும். அது ஒரு போதும் அப்படி இருந்தது இல்லை.

பதிப்புரிமையின் நோக்கம் “அறிவியல் மற்றும் பயனுள்ள கலைகளில் முன்னேற்றத்தை ஊக்குவிப்பது” என அரசியல் சாசனம் சொல்கிறது. இதனை‘பாஃக்ஸ் பிஃல்ம் மற்றும் டாயல்’க்கிடையேயான வழக்கில் உச்ச நீதிமன்றம் “பதிப்புரிமை தனியதிகாரத்தினை வழங்குவதென்பது இயற்றுபவரின் முதலாளிகளிடமிருந்து பொது மக்கள் பெற்றுக் கொள்ளக்கூடிய பொதுவான நன்மைகளில் உள்ளது” என விளக்கியுள்ளது.

அரசியல் சாசனத்தையோ உச்சநீதிமன்றத்தையோ ஏற்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. (ஒரு காலத்தில் அவையிரண்டுமே அடிமைத் தனத்தை ஒரு பொருட்டாகக் கருதவில்லை.) ஆக அவற்றின் நிலைகள் உடைமையாளர் உயர்ந்தவர் எனும் வரையறையை மறுத்துரைப்பவையாகாது. ஆனால் மரபின் வழி அங்கீகாரம் பெறாத அடிப்படைவாத வலது சாரி அனுமானமெனும் விழிப்புணர்வு இதன் கூற்றை வலுவிழக்கச் செய்யும் என நான் நம்புகின்றேன்.

நிறைவுரை

தங்களின் சுற்றத்தாருக்கு உதவுதை நமது சமூகம் ஊக்குவிக்கின்றது என எண்ண நாம் விழைகின்றோம். ஆனால் கட்டுபடுத்தும் பொருட்டு ஒருவருக்கு ஒவ்வொரு முறையும் பரிசளிப்பதாலோ அவர்கள் இங்ஙனம் பொருளீட்டியமைக்காக போற்றுவதாலோ, இதற்கான எதிர்மறையான சமிக்ஞையினையே அனுப்புகின்றோம்.

தனிப்பட்ட இலாபத்துக்காக சமூகத்தின் நலனைப் புறக்கணிப்பதற்கான பொதுவான ஒத்திசைவே மென்பொருள் பாதுகாப்பின் ஒரு வடிவம். இப்புறக்கணிப்புக்கானச் சுவட்டினை ரொனால்ட் ரீகன் முதல் டிக் செனி வரை, எக்ஸானிலிருந்து என்ரான் வரை, திவாலாகும் வங்களிலிருந்து பள்ளிகள் வரை நாம் காணலாம். இருக்க இடமற்ற ஜனத் தொகையினையும் சிறையிலுள்ள ஜனத் தொகையினையும் கொண்டு இதனை நாம் அளவிடலாம். சமூகத்திற்குத் குந்தகமான உணர்வு தனக்குத் தானே தீனி இட்டுக் கொள்கிறது. ஏனைய மக்கள் நமக்கு உதவ மாட்டார்கள் என நாம் பார்க்கிற பொழுது நாமும் அடுத்தவருக்கு உதவுவதை பாதகமாகக் காண்போம். சமூகம் ஒரு கானகமாகச் சிதைந்து போகின்றது.

கானகத்தில் நாம் வாழ விரும்பவில்லையென்றால், நமது அணுகுமுறைகளை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும். தேவையான பொழுது கூட்டுறவாடும் ஒருவரே நல்ல குடிமகன் என்ற கருத்தை நாம் அனுப்பத் துவங்க வேண்டும். அடுத்தவரிடமிருந்து வெற்றிகரமாக எடுத்துக் கொள்பவரை அன்று. கட்டற்ற மென்பொருள் இயக்கம் இதற்காக பங்களிக்கும் என நான் நம்புகின்றேன். குறைந்த பட்சம் ஒரு துறையிலாவது. தன்னார்வ கூட்டுறவினால் ஊக்குவிக்கப்பட்டு இயங்கும் அதிக ஆற்றலுடைய முறையினால் நாம் கானகத்தினை மாற்றிக் காட்டுவோம்.

அடிக்குறிப்புகள்

  1. “பிரீ சாப்ட்வேரிலுள்ள ” “பிரீ” சுதந்தரத்தினைக் குறிக்கின்றது. விலையினை அல்ல பிரீ சாப்ட்வேருக்காக கொடுக்கப் படும் விலை சுழியமாகவோ , சிறியதாகவோ அல்லது (அரிதாக) அதிகமானதாகவோ இருக்கலாம்.
  2. மாசு மற்றும் பயண நெரிசல் போன்ற பிரச்சனைகள் இம்முடிவினை மாற்றிவிடாது. பொதுவாக வாகனமோட்டுவதை ஊக்குவிக்காது இருக்கும் பொருட்டு, அதனை விலையதிகமானது ஆக்க விரும்புவோமாயின், அதனைச் செய்ய வசூல் சாவடிகள் உகந்தவை அல்ல. இதுவும் நெரிசலுக்கும் மாசுக்கும் பங்களிக்கின்றது. காசோலின் மீதான வரி இதனினும் அதிக நன்மை பயக்கும். அதேபோல் பாதுகாப்பை அதிகரிக்க அதிக வேகத்தினை மட்டுப் படுத்த விரும்புவதும் சம்பந்தமில்லாதது. சாலைக்கு கட்டற்ற அனுமதியளிப்பது, கொடுக்கப் பட்ட எந்தவொரு வேக அளவிற்கும், நிறுத்தங்களையும் தாமதங்களையும் தவிர்த்து சராசரி வேகத்தினை மேம்படுத்தும்.
  3. ஒருவர் ஒரு குறிப்பிட்ட நிரலொன்றைத் தீமைத் தர வல்லதாகக் கருதி, அது கிடைக்கவே கூடாது எனக் கருதலாம். உதாரணத்திற்கு லோடஸ் மார்க்கெட் ப்ளேஸ் டேடாபேஸ், பொது மக்களின் அங்கீகாரம் கிடைக்காததால் வாபஸ் பெறப்பட்டது. நான் சொல்லும் பெரும்பாலானவை இவ்வுதாரணத்திற்கு பொருந்தாது. உடைமையாளரைக் கொண்டிருத்தல் வேண்டும் எனும் வாதத்திற்கு, உடைமையாளரைக் கொண்டிருப்பதென்பது நிரலை அதிகமாகக் கிடைக்கச் செய்யாது என்பதற்கு இது சிறிய அளவிலான அர்த்தம் கொடுக்கிறது. ஒருவர் விரும்புவது போல் மென்பொருளொன்றின் பயன்பாடு தீமைவிளைவிப்பதாகக் கருதப்படுவதால் உடைமையாளர் முற்றிலும் இதனை இல்லாது செய்து விடமாட்டார்.

இக்கட்டுரை கட்டற்ற மென்பொருள், கட்டற்ற சமூகம்: ரிச்சர்ட் ஸ்டால்மேனின் தேர்வு செய்யப் பட்ட கட்டுரைகள் நூலில் இடம்பெற்றுள்ளது.